கோயமுத்தூர் துடியலூர் அருகே குப்பை பொறுக்கும் வேலை பார்த்து வருபவர் முகமது பாசில்(28) இவருக்கு பன்னாரி என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் நாள்தோறும் குப்பை பொறுக்கிக் கொண்டு தெருவோரங்களில் தங்கி இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கி கொண்டு இருந்த ரமேஷ்(51) என்ற நபருடன் முகமது பாசிலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இவர்கள் நாள்தோறும் குப்பை பொறுக்கி அதன் மூலமாக வரும் வருமானத்தில் இரவு நேரங்களில் மது அருந்தி வந்திருக்கிறார்கள். அதேபோல முகமது பாசிலும் ரமேஷ் மது அருந்திவிட்டு தனியார் இனிப்பு கடை முன்புறம் இருக்கின்ற தரையில் படுத்து இருக்கிறார்கள்.
அப்போது முகமது பாசில் ரமேஷை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்திருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரமேஷை தகாத வார்த்தைகளால் திட்டி ஆடைகள் இல்லாமல் நடக்க வற்புறுத்தி இருக்கிறார் இதன் காரணமாக, கோபத்தில் இருந்த ரமேஷ் அதிகாலை 2 மணி அளவில் முகமது பாசில் உறங்கிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டிருக்கிறார்.
இதில் முகமது பாசில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆகவே ரமேஷ் அருகில் இருந்த காவல் நிலையத்தில் நடந்ததை தெரிவித்து சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை சார்ந்தவர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
அத்துடன் உயிரிழந்த முகமது பாசில் உடலை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.