சென்னை ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பிரபல ரவுடியான இவர் தற்சமயம் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு யோகேஸ்வரன் வேலைகள் முடிந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று யோகேஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி இருக்கிறது. இதில் கழுத்து, முகம், தலை போன்ற பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அவருடைய மனைவி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாக ரவுடியை கொலை செய்துவிட்டு அந்த மர்ம கும்பல் தாங்கள் வந்த வாகனங்களில் தப்பிச் சென்றன இதன் பிறகு அக்கம் பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையைச் சார்ந்தவர்கள் யோகேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர் இதில் முன் விரோதம் காரணமாக யோகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது.
பிரபல ரவுடியை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. வீட்டிற்கு புகுந்து ரவுடியை கொலை செய்துவிட்டு சவகாசமாக மர்மகும்பல் தப்பிச்சென்ற சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.