சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத்தெருவில் வசிப்பவர் சரவணன் (40). இவர், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் தையல்காரராக வேலை செய்து வந்தார். இவருடன் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மாதவன் என்பவரும் தையல்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, சரவணன் சரியாக துணி தைக்கவில்லை என்று மாதவன் கூறியுள்ளார்.
தன்னை குறை கூறியது பிடிக்காமல் மாதவனுடன், சரவணன் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் வாக்குவாத்தால் ஆத்திரமடைந்த மாதவன் அருகே இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை குத்தினார். இதில் சரவணன் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்கு ஆயுதமாக இருந்த கத்திரிக்கோலை பறிமுதல் செய்தனர். சாதாரண வாக்குவாதத்தில் தொடங்கி கொலையில் முடிந்த இந்த கொலை சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.