தமிழகத்தை பொறுத்தவரையில் பல சாதனையாளர்கள் கிராமத்தில் இருந்தே உருவாகிறார்கள். ஆனால் அப்படி கிராமத்தில் இருக்கும் திறமை மிக்கவர்கள் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை.
காரணம் அவர்களிடம் திறமை இருந்தாலும் அந்த திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி திறமை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பிரபலமடைந்தால் பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் ஒரு சிலரால் அவர்கள் பழிவாங்கப்படுவது அவ்வப்போது நடைபெற தான் செய்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(27). வாலிபால் விளையாட்டு வீரரான இவர் சென்னை அம்பத்தூரில் இருக்கின்ற உசேன் மெமோரியல் என்ற தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேபாள நாட்டின் போக்ரா நகரத்தில் இருக்கின்ற ரங்கசாலா விளையாட்டு அரங்கத்தில் நடந்த வாலிபால் போட்டியில் பங்கேற்றுக் கொள்வதற்காக நேபாளத்திற்கு ஆகாஷ் சென்றிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்மஸ் தினத்தன்று வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆகாஷ் அந்த மைதானத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதித்தனர். அப்போது அவர் மரணமடைந்தார் என்பது தெரிய வந்திருக்கிறது. ஆகாஷ் உயிரிழந்ததை அறிந்து கொண்ட அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
ஆகாஷின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அவருடைய பெற்றோர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். அதோடு மகனின் உடலை விரைவாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
திருவள்ளூர் கைவண்டு கிராமத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தய போட்டிகள், பளுதூக்குதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்கள் இந்த கிராமத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஆகாஷின் மரணம் தொடர்பான செய்தியை அறிந்து விளையாட்டு வீரர்கள் எல்லோரும் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.