எந்த ஒரு ஆசையும் மனிதனுக்கு எல்லை மீறி விட்டால் அந்த ஆசையை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மன நிலைக்கு அந்த மனிதன் சென்று விடுவான்.அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் மாநிலம் ஹவுஹத்தியை சேர்ந்தவர் பந்தனா கலிதா.
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தன்னுடைய கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி உள்ளிட்டோரை காணவில்லை என்று இவர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது குறித்து பந்தனாவிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியானது.
அமர்ஜோதி வேலையில்லாமல் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக சேர்ந்த பந்தனாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஒரு நண்பருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவிலும் அவர் இருந்து வந்திருக்கிறார்.
வேலைக்கு செல்ல வேண்டாம் என்று பந்தனாவின் மாமியார் பந்தனாவை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக, மாமியார், மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது இதன் பிறகு சென்ற வருடம் ஜூலை மாதம் 26ஆம் தேதி பந்தனா தன்னுடைய மாமியாரை கொலை செய்திருக்கிறார்.
நண்பர்களின் உதவியுடன் உடலை துண்டு, துண்டாக வெட்டி 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்திருக்கிறார். இதன் பின்னர் கார் மூலமாக மேகாலயாவுக்கு சென்று மலையில் இருந்து உடல் பாகங்களை அவரும் அவருடைய ஆண் நண்பரும் சேர்ந்து வீசி உள்ளனர்.
அதன் பிறகு இதே போல சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தன்னுடைய கணவரையும் கொலை செய்து அவருடைய உடல் பாகங்களை அதே பகுதியில் இருக்கின்ற பள்ளத்தாக்கில் வீசியதும் காவல்துறையிரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பந்தனா கலிதா மற்றும் அவருடைய நண்பர்கள் தேகா உள்ளிட்ட 3 பேரை அசாம் மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.