மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.52 மணி அளவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோரிப்பாளையம் மதிச்சியம் பகுதியில் கள்ளழகரை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதோடு அங்கே காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர்.
இத்தகைய நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக அதிகாலை 4 மணி அளவில் மதுரை அரசு மருத்துவமனை வினவருக்கு செல்லும் பகுதியில் 2 குழு மோதிக்கொண்டது. 14 பேர் கொண்ட கும்பல் ஒன்று திருவிழா பார்க்க வந்த 5 பேரை வழிமறித்து தாக்கி உள்ளது. இதில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். உடனடியாக அந்த பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த மதிச்சியம் காவல்துறை ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை அடுத்துள்ள எம்.கே. புரம் புளியந்தோப்பை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சூர்யா என்கின்ற சூரிய பிரகாஷ் (23) என்று தெரியவந்துள்ளது.
மதிச்சியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கும் போது திருவிழாவுக்கு வந்த பெண் ஒருவரை கேலி செய்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டார். என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனாலும் செயின் பருப்பில் ஈடுபட்ட கும்பலை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் சூரிய பிரகாஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கொலையாளிகளை பிடித்தால் தான் இதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறி இருக்கிறார்கள்.