கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள வேப்பனஹள்ளியில் ஹைதர் அலி தன்னுடைய மனைவி ஷானுமா, 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். தம்பதிகள் இருவரும் பை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் தம்பதிகள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஹைதர் அலி மற்றும் ஷானுமா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளனர். இதனை பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கத்தி அலரியுள்ளனர்.
குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வேப்பனஹள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், இது பற்றி வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தம்பதிகள் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்தனரா? இல்லை குடும்ப சண்டையால் தற்கொலை செய்தனரா? என்ற விபரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.