மகனின் வெற்றியை வேண்டி மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம் செய்து வருகிறார்.
நாடாளுமன்ற 18 வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் ஆகிய கட்சிகள் தனித்தனியே தங்களது தலைமையில் கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டனர். இந்த நான்கு முனை போட்டியில் தற்போது வரை திமுக 38-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொண்டது. இதில் தேமுதிக கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் போன்றவர்கள் போட்டியிட்டனர்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த தேமுதிக வேட்பாளரும், நடிகர் விஜய்காந்த் மகனுமான விஜய பிரபாகரன், சற்று பின்னடைவு அடைந்துள்ள நிலையில், பிரேமலதா விஜய்காந்த் கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தியானம் செய்து வருகிறார்.
பிற்பகல் 1.40 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் 1,48,000 ஓட்டுகள் கடந்து 800 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் சற்று பின்னடைவு அடைந்துள்ளார். இந்த நிலையில் தான், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தியானம் செய்து வருகிறார். முன்னதாக விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.