திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.
எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தொடர்ந்து அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜூலை 14-ம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.