செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் வழக்கின் விசாரணையானது இன்று நடைபெற உள்ளது.