சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது, ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அத்துடன் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆசிரியர்கள் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்; கடந்த ஏழு நாட்களாக அறவழியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு எங்கள் கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம். ஆனால் பல வழிகளில் எங்கள் போராட்டத்தை நீர்த்து போக செய்யும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன. இதுகுறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.
10,000 ரூபாய் சம்பளத்தில் அரசு பணியில் அமர்த்த வலியுறுத்தினோம். நிதி பற்றாக்குறை தான் உள்ளது என்றால் நீதியும் பற்றாக்குறையாக உள்ளதா…? அறவழியில் போராடிய எங்களை கைது செய்து அடாவடி செய்துள்ளனர். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.