பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மாணவர்கள் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களுக்குள்ளான ஆசிரியர்களின் பட்டியல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் பணிநீக்கம், கல்விச் சான்று ரத்து உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில்; மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா..? பாதுகாப்பற்ற சூழலில் உள்ளீர்களா..? தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா..? உடனே 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழையுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.