திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சூலூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30) கட்டிட தொழிலாளியான இவருக்கும் உமாமகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என இரு குழந்தைகள் உள்ளனர்.
உமாமகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், உமாமகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு தனது மனைவியை வீட்டுக்கு அனுப்புமாறு மாமனார் மற்றும் மாமியாரிடம் செங்கையா கூறியுள்ளார். செங்கையாவின் வார்த்தைகளை நம்பி உமாமகேஸ்வரி உடன் சென்றார்.
வீட்டுக்கு வந்த தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, வெளியே சென்ற செங்கையா, நள்ளிரவில் வந்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த செங்கையா, இரும்பு கம்பியால் உமாமகேஸ்வரியின் பின் தலையில் அடித்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி இறந்தார். பின்னர், வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்த செங்கையா, உமாமகேஸ்வரியின் அண்ணன் வெங்கடேசிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உமாமகேஸ்வரி கொலை குறித்து கூறியுள்ளார்.
அங்கிருந்து ஸ்ரீகாளஹஸ்தி நகர காவல் நிலையம் சென்று சரணடைந்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.