தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. தற்பொழுது அதற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.