நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு, மாநில அரசுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என விஜய் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக பேசியுள்ளார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், கிராமப் புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது தான் ஒரே தீர்வு. சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும். கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என பேசினார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு, மாநில அரசுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என விஜய் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பாஜக அரசுக்கு எதிரான விஜயின் அரசியல் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளனர். அதேவேளையில் பாஜக கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது வருந்தத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Read more | இது வெறும் ட்ரைலர்… அடுத்த 20 ஆண்டுகள் எங்களுடைய ஆட்சி தான்..!! – பிரதமர் மோடி சூளுரை