யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ‘கழிவுநீர் அகற்று சேவை வாகனங் கள் ஒப்பந்தம்’ தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று காலை திரண்டனர். திடீரென அவர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். வீட்டுக்குள் கழிவுநீரையும் ஊற்றினர். மேலும், சவுக்கு சங்கரின்தாயாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்பொழுது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை – கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வசித்து வரும் ஆச்சிமுத்துவின் மனைவியான கமலா (68) என்பவர் இன்று காலை தன் வீட்டில் சுமார் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்து, தன்னை அவதூறாக பேசியதோடு, கழிவு நீரை வீசி வீட்டை மாசுபடுத்தி, தனக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் மனுவாக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், புகார்தாரர் கமலாவின் மகனும், யூடியூபருமான சங்கர் என்கிற சவுக்கு சங்கர். தனது பேட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் தனது வேண்டுதலில் மேற்படி மனு மீதான விசாரணையை மற்றொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மேற்கண்ட காவல் நிலைய மனு மேல் விசாரணைக்காக சிபிசிஐடி (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.