மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 14 பேரைக் கைது செய்தது இலங்கை கடற்படை.
ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த வாரம் இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 14 பேரைக் கைது செய்தனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். 14 மீனவர்களையும் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிலைப்பாடு தவறு. மத்திய அரசை வலியுறுத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.