ஆசிரியர்கள் பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இதுவரை ஆசிரியர்கள் பராமரித்து வந்த கருவூலப்பதிவேடு, சம்பளப் பிடித்தப் பதிவேடு, நிலுவை சிறப்பு கட்டணப்பதிவேடு உள்ளிட்ட 11 வகையான பதிவேடுகளை பராமரிக்கத்தேவையில்லை.
மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை அமல்படுத்துகின்ற ஆசிரியர்கள், பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும்; வேறு எந்த பதிவேடுகளையும் பராமரிக்கத்தேவையில்லை. குறிப்பாக, 4 முதல் 12-ம் வகுப்பு வரையான வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள், பணிப்பதிவேடு மற்றும் பாடத்திட்டப் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.