காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், இரு மாநில தரப்பு வாதங்களும் விரிவாகக் கேட்கப்பட்டன. முடிவில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 11,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது நாளொன்றுக்கு தோராயமாக ஒரு டி.எம்.சி தண்ணீர் திறப்புக்குச் சமமானதாகும்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் தங்களது கோரிக்கையை வலுவாக முன்வைத்தனர். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 88 டி.எம்.சி தண்ணீரில், இதுவரை சுமார் 12 டி.எம்.சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, நிலுவையில் உள்ள மீதமுள்ள தண்ணீரை இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஏற்கனவே இந்த ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த அளவிலான தண்ணீரை கர்நாடகம் திறக்காத நிலையிலேயே, தற்போது மீண்டும் இந்த புதிய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. குழுவின் இந்தப் பரிந்துரை இன்று பிற்பகல் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முறைப்படி சமர்ப்பிக்கப்பட உள்ளது. அங்கு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவாகப் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


