பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டும், அவர் பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டியும் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு மக்கள் நல்வாழ்வு மற்றும் சேவை இயக்கங்களை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த முன்னெடுப்பு தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நிதின் நபின், “மக்களுக்குச் சேவையாற்றுவதே தேசத்திற்குச் சேவையாற்றுவது என்ற உயரிய கொள்கையுடன் பிரதமர் மோடி இயங்கி வருகிறார். தேசக் கட்டமைப்பிற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அவரது 25 ஆண்டுகாலப் பொதுவாழ்வு இணையற்றது. அவரது தொலைநோக்குப் பார்வையிலான தலைமையும் அர்ப்பணிப்புமிக்க உழைப்பும்தான், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நாட்டை அசுர வேகத்தில் முன்னெடுத்துச் செல்கிறது” என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், “நாட்டின் முன்னேற்றத்திற்கும் பிரதமரின் அர்ப்பணிப்பிற்கும் நன்றி செலுத்தும் விதமாக, செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக அனைவரும் உளமார வாழ்த்திப் பிரார்த்திக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More : மகனையே ஒழுங்காக வளர்க்காத ஸ்டாலின்..!! கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரமேஷ்..!!



