காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு, தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ. 80 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் விஜய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவெடுக்க வைக்கும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயர்தரப் பயிற்சி வழங்குதல், அதிக அளவிலான ஊக்கத்தொகைகளை அறிவித்து ஊக்குவித்தல் மற்றும் சர்வதேசத் தரத்திலான நவீன விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026’ல் தாயகத்திற்குப் பெருமை தேடித்தந்த தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.
அதேபோல், ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ (Triple Jump) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேலுக்கு ரூ. 30 லட்சமும், அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ. 20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் விஜய், பதக்கம் வென்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை போர்த்தித் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
Read More : தமிழகத்தின் மொத்த கடன் எத்தனை கோடி தெரியுமா? வட்டி மட்டுமே இவ்வளவா? நிதியமைச்சர் பரபரப்பு தகவல்..!!



