ஸ்வீடனில் நடைபெற்ற ஐரோப்பிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் (ERT) உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை சீர்திருத்தங்கள் மற்றும் உலக முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். இந்த மாநாடு கோதன்பர்க் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா–ஐரோப்பா பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிரதமர் மோடி பேசுகையில்ல், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் உருமாற்றம் என்ற அடிப்படையில் வேகமாக முன்னேறி வருகிறது. அரசின் வலுவான அரசியல் உறுதியுடன் இந்தியாவின் சீர்திருத்த விரைவு ரயில் முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
ஐரோப்பிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைத்த மோடி, உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் போன்ற துறைகளில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். இந்தியா உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையமாக உருவாகும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்ப புத்தாக்கத்தின் அடுத்த அலை இந்தியாவிலேயே இணைந்து உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ‘Design in India, Make in India, Export from India’ என்ற கொள்கை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) பிரதமர் மோடி “மாற்றத்தை ஏற்படுத்தும் பொருளாதார கூட்டாண்மை” என வர்ணித்தார். இந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற இணைப்பு திட்டங்கள் இந்தியா–ஐரோப்பா வர்த்தகத்தை மேலும் விரிவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’, பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் முக்கிய கனிம திட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் மோடி அழைப்பு விடுத்தார். இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையிலான கூட்டாண்மை பாரம்பரிய வர்த்தகத்தைத் தாண்டி தொழில்நுட்ப மற்றும் புதுமை துறைகளில் வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
Read more: நடராஜருக்கு கடிதம் எழுதி குறைகளை சொல்லும் பக்தர்கள்.. கடலூரில் இப்படி ஒரு அதிசய கோவிலா..?



