தலைநகர் டெல்லியில் பேருந்து நிலையம் அருகே இறந்த பெண் ஒருவரின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . டெல்லியில் உள்ள சாராய் காலே கான் பகுதியின் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத உடல் பாகங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் தலை கைகள் மற்றும் இடுப்பின் சில பகுதிகள் கிடைத்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
இச்சம்பவம் பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறை “இச்சம்பவத்தில் இறந்தது பெண்ணாக இருக்கலாம் என்று தலை முடியை வைத்து கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. உடல் பாகங்களில் இருந்து வந்த துர்நாற்றத்தை தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறையை தொடர்பு கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட பின் அவரது உடலில் இருந்து பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. தடையவியல் நிபுணர்கள் அந்தப் பகுதியை முழுவதுமாக சோதனை செய்தனர். கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நொய்டாவில் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் டெல்லியில் மட்டும் இரண்டு பெண்கள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.