டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி தெற்கு வளாக காவல் நிலையத்தில் ஆண்கள் தங்கும் விடுதியின் உரிமையாளர் ஹரிராம் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடம் ஒரு பிஜி (PG) விடுதியாகும். தரை தளத்தில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகளே கட்டடம் இடிந்து விழக் காரணம் எனத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேட பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும் டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த மோசமான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்,” என்று ஜனாதிபதி முர்மு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்: இச்சம்பவத்தை “வேதனைக்குரியது” என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். “டெல்லி சத்யா நிகேதன் கட்டட விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ராகுல் காந்தி வேதனை: இந்த விபத்து “மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், “போதிய விடுதி வசதிகள் இல்லாததால், மாணவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 40 பேர் வரை ஒரே கூரையின் கீழ் பிஜி விடுதிகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் உயிரும் விலைமதிப்பற்றது, அது பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.



