பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியமான ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளில் ஒன்றாக PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளது. இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உடல் எடை அதிகமாக இருந்தால் மட்டுமே PCOS ஏற்படும் என்ற தவறான எண்ணமும் பலரிடம் உள்ளது.
உடல் எடை மற்றும் BMI இயல்பான நிலையில் இருக்கும் பெண்களுக்கும் PCOS ஏற்படலாம். இதனை மருத்துவத் துறையில் “Lean PCOS” என குறிப்பிடுகின்றனர். உடல் பருமன் இல்லாததால் தங்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை என பல பெண்கள் நினைப்பதால், ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தும் சூழல் உருவாகிறது. இதனால் மருத்துவ ஆலோசனையை நாடுவதில் தாமதம் ஏற்படலாம்.
மாதவிடாய் சுழற்சி முறையற்றுப் போவது அல்லது பல மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருப்பது முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். இதனுடன் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, தலையில் முடி உதிர்தல் போன்ற மாற்றங்களும் ஏற்படலாம். சில பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல், மீண்டும் மீண்டும் கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகள், தொடர்ந்து சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகளும் இருக்கலாம்.
உடல் எடை இயல்பாக இருந்தாலும், இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். உடலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு உரிய முறையில் பதிலளிக்காதபோது, ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கலாம். இதன் தொடர்ச்சியாக கருப்பையில் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன்களின் அளவில் மாற்றம் ஏற்பட்டு, PCOS தொடர்பான பாதிப்புகள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
இன்சுலின் எதிர்ப்பு வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமலேயே நீடிக்கலாம். உரிய கண்காணிப்பு இல்லாமல் இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால், சிலருக்கு முன் நீரிழிவு நிலை மற்றும் பின்னர் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர் பாலக் தேவான் தெரிவித்துள்ளார்.
PCOS-ஐ கண்டறிவதில் வெளிப்புற அறிகுறிகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொள்வது முக்கியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு, ஹார்மோன் அளவுகள் உள்ளிட்ட பரிசோதனைகளுடன், மருத்துவரின் ஆலோசனைப்படி இடுப்புப் பகுதி அல்ட்ராசவுண்ட் பரிசோதனையும் மேற்கொள்ளப்படலாம்.
மாதவிடாய் சுழற்சியில் தொடர்ந்து மாற்றம், அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, முடி உதிர்வு அல்லது கருத்தரிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் நீடித்தால், தாமதிக்காமல் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம். ஆரம்பத்திலேயே பிரச்சினையை கண்டறிந்து உரிய மருத்துவ கண்காணிப்பை மேற்கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
Also Read: உங்க குழந்தைக்கு இந்த தின்பண்டங்கள் தர்றீங்களா? சுவைக்கு ஓகே.. ஆரோக்கியத்திற்கு பேராபத்து..!! பெற்றோர்களே உஷார்..!!



