90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சி நடன நடிகையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் டிஸ்கோ சாந்தி. தனது தனித்துவமான நடனங்களாலும், திரையில் தோன்றிய உற்சாகமான நடிப்பாலும் அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், தற்போது சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு முக்கியமான விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். மறைந்த கணவர் நடிகர் ஸ்ரீஹரியின் நினைவுகள் முதல், திரையுலகில் சந்தித்த விரும்பத்தகாத அனுபவம் வரை பல்வேறு விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசிய டிஸ்கோ சாந்தி, தனது கணவர் ஸ்ரீஹரி மீது அளவற்ற பாசம் வைத்திருந்ததாகக் கூறினார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், அந்த இழப்பிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆனதாகவும் அவர் தெரிவித்தார். கணவரும் குழந்தைகளும்தான் தனது உலகம் என்றும், படப்பிடிப்புக்கு சென்றிருந்தாலும் அவருக்காக வீட்டில் சமைத்து எடுத்துச் சென்று ஒன்றாக உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் நினைவுகூர்ந்தார். தனது விருப்பங்களை எப்போதும் மதித்து, அன்புடன் கவனித்துக் கொண்ட கணவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் அவர் உருக்கமாகப் பகிர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, திரையுலகில் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், அந்தப் படத்தின் இயக்குநர் ஒருவர் தன்னிடம் தொடர்ந்து நெருக்கமாக பழக முயன்றதாகவும், படப்பிடிப்பு முடிந்த பிறகும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் கூறினார். ஆரம்பத்தில் அவரது நடத்தையின் நோக்கம் புரியாமல் இருந்த நிலையில், படக்குழுவில் இருந்த ஒருவர் எச்சரித்த பிறகே அது தவறான அணுகுமுறை என்பதை உணர்ந்ததாக தெரிவித்தார்.
அதன்பிறகும் அந்த இயக்குநர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறிய அவர், ஒருகட்டத்தில் நேரில் வருமாறு அழைத்து, தனது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியதாகச் சொன்னார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு யாரும் தன்னிடம் எல்லை மீறி நடக்கத் துணியவில்லை என்றும், பெண்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சப்படாமல் தங்களுக்கான எல்லையை தெளிவாகக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘புல்லட்’ திரைப்படத்தின் மூலம் டிஸ்கோ சாந்தி மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். அமானுஷ்யம் மற்றும் திரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “நான் உன்னோட பொண்டாட்டிய லவ் பண்றேன்” செல்போன் மெசேஜால் அம்பலமான இன்ஸ்பெக்டரின் ரகசிய லீலைகள்!



