எபோலா பரவல் : இந்த மாதம் நடைபெற இருந்த இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு ஒத்திவைப்பு..!

ebola

ஆப்பிரிக்காவில் தொடர்ந்து பரவி வரும் எபோலா நோய்த்தொற்றின் காரணமாக, மே 28 முதல் 31 வரை புது டெல்லியில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்தது. இந்த உச்சிமாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களுக்கான புதிய தேதிகள், இரு தரப்பு பரஸ்பர கலந்தாய்வுகளுக்குப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும்.


வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஆப்பிரிக்க நாடுகளுடனான தனது ஒற்றுமையை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், அங்கு மாறிவரும் சுகாதாரச் சூழலைக் கையாள்வதில் கவனம் செலுத்தி, ‘ஆப்பிரிக்கா நோய் தடுப்பு மையம்’ (Africa CDC) தலைமையிலான முயற்சிகளுக்குப் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மாறிவரும் சுகாதாரச் சூழல் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், ஆப்பிரிக்கா நோய் தடுப்பு மையம் மற்றும் தொடர்புடைய தேசிய நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம், கண்டம் முழுவதும் பொது சுகாதாரத் தயார்நிலை மற்றும் பதிலளிக்கும் திறன்களை வலுப்படுத்துவதில் தொடர் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்,” என்று தெரிவித்தது.

ஒற்றுமை, பரஸ்பர மரியாதை, ‘தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு’ (South–South cooperation), மற்றும் அமைதி, மேம்பாடு, வளம் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் நீண்டகால கூட்டாண்மையை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

“ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களின் முழுமையான பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தும், கண்டத்தில் உருவாகி வரும் பொது சுகாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டும், இந்த உச்சிமாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை நடத்துவது குறித்து இந்திய அரசாங்கம், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

எபோலா தொடர்பான அறிவுறுத்தலை வெளியிட்ட இந்தியா

இதனிடையே எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் அல்லது அந்நாடுகள் வழியாகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான ஒரு அறிவுறுத்தலையும் இந்தியா வெளியிட்டது. சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) வெளியிட்ட இந்த அறிவுறுத்தலில், எபோலா அறிகுறிகள் தென்படுபவர்கள் அல்லது எபோலா பாதிப்புக்கு ஆளாகியிருக்கக்கூடிய பின்னணி கொண்டவர்கள், தங்கள் குடியேற்றச் சோதனை (Immigration clearance) நிறைவு செய்யப்படுவதற்கு முன்பாகவே சுகாதார அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC), உகாண்டா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் குறித்து அதில் தனிப்படக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாடுகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பால் (WHO) “அதிக ஆபத்துள்ள நாடுகள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் எபோலா பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை.. மேலும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, அரசாங்கம் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் (UTs) அனைத்து நிலைகளிலும் தங்களின் தயார்நிலையை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“எழும் எந்தவொரு சூழலுக்கும் துரிதமாகப் பதிலளிக்க, இந்திய அரசு முழு விழிப்புணர்வுடனும் தயார் நிலையிலும் உள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களையும் தகவல்களையும் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதோடு, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Read More : மீண்டும் உயிர்கொல்லி எபோலா பரவல்.. நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை.!

English Summary

Due to the continued spread of the Ebola infection in Africa, the Fourth India-Africa Forum Summit, which was scheduled to be held in New Delhi from May 28 to 31, has been postponed.

RUPA

Next Post

மனைவியிடம் மருத்துவ ஆதாரம் இருந்தால், கணவரை 'ஆண்மையற்றவர்' என அழைப்பது அவதூறு ஆகாது: உயர்நீதிமன்றம் கருத்து..!

Thu May 21 , 2026
The Allahabad High Court has held that a wife calling her husband "impotent" does not amount to defamation, provided there is medical evidence to support her claims.
allahabad high court

You May Like