நடிகர் விஜய்க்கு மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, பனையூரில் கடந்த ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில், அவர் கலந்து கொள்ள வந்த காரில் இருந்த ஸ்டிக்கர்தான் அபராதம் விதிக்க காரணமாக இருந்துள்ளது. இதற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் ’’வாரிசு’’ படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடந்த நிலையில், தற்போது சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. இதில், நடிகர் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் மற்றும் முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பு ஆண்டுக்கு ஒருமுறை ரசிகர்களை சந்திப்பது வழக்கம். கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்கவில்லை. கடந்த 20ம் தேதி வழக்கம் போல் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து பேசியது மட்டும் இன்றி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதில், விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு விஜய் சில ஆலோசனைகளை வழங்கினார் குறிப்பாக தன்னுடைய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி சுமூகமாக முடிந்த நிலையில் அவர் அணிந்திருந்த சட்டை குறித்து சர்ச்சை எழுந்தது. அவர் அணிந்த சட்டையின் விலை ரூ.32 லட்சம் என கூறி மீம்கள் வெளியானது. இந்நிலையில் அவர் வந்த கார் பிரச்சனையாகி உள்ளது. விலை உயர்ந்த காரில் வந்தபோது கறுப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி தற்போது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.