தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் அரசின் கனவுத் திட்டமான ‘தாய்மாமன்’ திட்டத்திற்கான தயாரிப்பு மற்றும் விநியோக டெண்டரை முன்னணி நகைக்கடை நிறுவனங்களான ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 22 காரட் தங்கத்தில் மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கான தங்கத்தை அரசே வழங்கும் நிலையில், மோதிரங்களை நேர்த்தியாக தயாரித்து, ஹால்மார்க் முத்திரையிட்டு, பேக்கிங் மற்றும் காப்பீட்டுடன் வழங்குவதற்காக கடந்த ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) கோரப்பட்டது.
இன்று திறக்கப்பட்ட இந்த டெண்டரில் 11 முன்னணி நகை விற்பனை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், தங்கம் தவிர்த்து செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் சான்றிதழ், பேக்கிங் மற்றும் காப்பீடு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கு வெறும் ஒரு பைசா மட்டுமே கட்டணமாக நிர்ணயித்து ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மிக குறைந்த விலைப்புள்ளியை கோரியிருந்தது.
மிக குறைந்த விலையை குறிப்பிட்ட நிறுவனத்தின் மதிப்பிற்கு இணையாகப் பணியாற்றப் பிற நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே உடன்பட்டது. இதனைத் தொடர்ந்து, 70:30 என்ற விகிதாச்சார அடிப்படையில் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜூன் மாதம் முதல் அடுத்த நான்கு மாதங்களுக்குள் சுமார் 1,28,499 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Read More : எங்களுக்கு கார் வேண்டாம்..!! அதற்கு பதில் இதை பண்ணுங்க..!! MLA சௌமியா அன்புமணி அதிரடி அறிவிப்பு..!!



