போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை
மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, மடப்புரம் கோவிலில் சாமி கும்பிட வந்த நிக்கிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக கோவிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அஜித் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் காரை யார் பார்க்கிங் செய்தனர் என கேட்டபோது, அவர் மாறி மாறி மூன்று நபர்களின் பெயர்களை கூறினார். முதலில் சரவணன், பிறகு அருண், பின்னர் தினகரன் என்ற பெயரை கூறினார். ஆனால், அவர்களை அழைத்து விசாரித்த போது, அவர்கள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றும், காரின் சாவி முழுமையாக அஜித்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமாரின் தம்பி நவீனை விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டபோது, அஜித்தான் நகையை எடுத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், திருடிய நகைகளை கோவிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்திருப்பதாகவும், அங்கு சென்று போலீசார் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை. விசாரணையின் போது, அஜித் தப்பிப் போவதற்காக ஓடினார், அந்த நேரத்தில் தவறி விழுந்தார்.
அவருக்கு வலிப்பு ஏற்பட்டது, அவரை உடனே திருப்புவனம் மருத்துவமனைக்கும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.