விண்வெளிப் படமெடுப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு முக்கிய குறையை சரி செய்யும் நோக்கில், இந்திய ஸ்டார்ட்அப் GalaxEye ‘திருஷ்டி’ (Drishti) செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து, SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் இந்த ஏவுதல் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியளவில் நடந்த இந்த ஏவுதல், இந்திய விண்வெளி தொழில்நுட்ப முன்னேற்றத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாக பார்க்கப்படுகிறது.
‘திருஷ்டி’ செயற்கைக்கோளின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இது ஒரே நேரத்தில் ஒளியியல் (Optical) மற்றும் செயற்கை துளை ரேடார் (SAR) தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே இடத்தின் படங்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாகும். இதுவரை உலகளவில் இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் தனித்தனி செயற்கைக்கோள்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவற்றை ஒரே செயற்கைக்கோளில் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் செயல்படச் செய்வது ஒரு பெரிய தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்படுகிறது. இதனை ‘Opto-SAR’ என GalaxEye நிறுவனம் குறிப்பிடுகிறது.
பொதுவாக, ஒளியியல் படங்கள் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவையாகவும் இருக்கும். ஆனால் மேகமூட்டம், மழை அல்லது இரவு நேரங்களில் அவை செயலிழந்து விடும். இதற்கு மாறாக, SAR தொழில்நுட்பம் எந்த காலநிலையிலும், மேகங்களை ஊடுருவியும் தொடர்ந்து படங்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது. ஆனால் அவற்றை புரிந்துகொள்ள நிபுணத்துவம் தேவைப்படும். இந்த இரண்டு தொழில்நுட்பங்களின் பலங்களை இணைத்து, குறைகளை நீக்கும் வகையில் ‘திருஷ்டி’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சியின் பின்னால் Suyash Singh தலைமையிலான குழு செயல்பட்டு வருகிறது. அவர் கூறுகையில், ஒளியியல் சென்சார்கள் செயல்படாத சூழலில் கூட, SAR தரவை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஒளியியல் போன்ற படங்களை உருவாக்கும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு இருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம், பயனர்களுக்கு எப்போதும் தெளிவான மற்றும் பயன்பாட்டிற்கு எளிதான தரவுகளை வழங்க முடியும் எனவும் கூறினார்.
இந்த GalaxEye நிறுவனம் Indian Institute of Technology Madras முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டதாகும். CAS500-2 திட்டத்தின் கீழ் 45 payload-களுடன் இணைந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் மேகமூட்டம் மற்றும் காலநிலை சிக்கல்கள் காரணமாக ஏற்படும் படமெடுப்பு தடைகளை சமாளிக்கவே இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் வானிலை நிலைமைகள் சீராக இருப்பதால், இத்தகைய சவால்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வருடத்தின் பெரும்பாலான காலங்களில் மேகமூட்டம் நிலவுவதால், தொடர்ச்சியான மற்றும் தெளிவான செயற்கைக்கோள் தரவைப் பெறுவது சவாலாக இருந்து வந்தது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் ‘திருஷ்டி’ முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த செயற்கைக்கோளில் இருந்து கிடைக்கும் தரவுகள் விவசாயம், பேரிடர் மேலாண்மை, நகர திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், எந்த காலநிலையிலும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தரவுகளை வழங்கும் இந்த முயற்சி, இந்திய விண்வெளித் துறைக்கு புதிய திசையை காட்டும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
Read more: வாகன ஓட்டிகளே அலர்ட்.. FASTag சரியாக ஒட்டவில்லைனா Blacklist..! NHAI வெளியிட்ட புதிய விதி..



