தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று தெரிவித்தார்.. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார். காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்.
சமூக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும். அமைச்சரவையில் இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அழைக்கிறோம். இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கும் அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா என்பது குறித்து அக்கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ உயர்நிலை குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் 9-ம் தேதி மாலை 5 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து, வெளியில் இருந்து ஆதரவை வழங்குகிறோம், நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம் என்று தெரிவித்தேன்.. அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்தும் உயர்நிலைக் குழுவில் ஆலோசனை செய்யப்பட்டது.. கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக் குமார் அந்த கருத்தில் உறுதியாக இருந்தார். அதனால் தான் 9-ம் தேதி மீண்டும் ஆலோசனை செய்ய வேண்டிய சூழல் வந்தது..
இறுதியில் ஆதரவை மட்டுமே வழங்குகிறோம், அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து தான் அறிவித்தோம்.. அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்றும், நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம் என்று அறிவித்தோம்..
இப்போது ஆதவ் அர்ஜுனா, விசிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கும் வெளிப்படையாக ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார்.. அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.. அது தனது தனிப்பட்ட கருத்து இல்லை. முதல்வரின் கருத்து என்றும் அவர் கூறியிருக்கிறார்..
இதற்காக மீண்டும் உயர்நிலை குழுவை கூட்ட வேண்டிய அவசியமில்லை.. இருந்தாலும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட சில முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேச வேண்டிய தேவை உள்ளது.. இந்த அழைப்பை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படையில் கலந்து பேசி விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்..” என்று தெரிவித்தார்..



