தமிழ்நாடு அரசு தனது முக்கியத் திட்டமான ‘மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்ட’த்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 4,000 கோடி செலவிட்டு வருகிறது.. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இத்திட்டத்தை அனைத்து அரசு பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதி, நலத்திட்ட விரிவாக்கத்தின் நிதி நிலைத்தன்மை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள் மீதான அதன் தாக்கம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பி உள்ளது.
‘விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் TNSTC-யால் இயக்கப்படும் குறிப்பிட்ட சாதாரணப் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம். போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை பொதுவாக ஆதரித்தாலும், இதனை வெளியூர் மற்றும் நீண்ட தூர வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
2026-27 இடைக்கால பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 3,600 கோடியிலிருந்து ரூ. 4,000 கோடியாக உயர்த்தப்பட்டது. அதேவேளையில், போக்குவரத்துத் துறைக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு ரூ. 12,964 கோடியிலிருந்து ரூ. 13,062 கோடியாகச் சற்று அதிகரித்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் சுமார் 730 கோடி முறை இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், தினமும் 55 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இச்சேவையைப் பயன்படுத்தி மாதம் தோறும் சுமார் ரூ. 800 முதல் ரூ. 1,500 வரை சேமிப்பதாகவும் அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல நாடுகள் இலவசப் பொதுப் போக்குவரத்து முறைகளை அமல்படுத்தியுள்ளதைக் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் நயினார், இத்திட்டத்தை வரவேற்றார்.
இருப்பினும், வெளியூர் வழித்தடங்கள் உட்பட அனைத்துச் சேவைகளுக்கும் இலவசப் பயணம் விரிவுபடுத்தப்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகை தேவை சுமார் ரூ. 20,000 கோடியாக உயரக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
TNSTC-யின் AITUC சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் நேரு துரை இதுகுறித்து , “இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, பேருந்துத் தொகுப்பை நவீனப்படுத்துதல், டயர்கள் கொள்முதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று கூறினார்.
தவெகவின் இந்த தேர்தல் வாக்குறுதியை ஆதரித்த அக்கட்சியின் பேருந்து ஊழியர் சங்க நிர்வாகி செந்தில் குமார், ஊழலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நலத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தத் தேவையான நிதியைத் திரட்ட முடியும் என்று கூறினார்.



