1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்..
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா தனது படங்களுக்காக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த சூழலில் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
பாரதிராஜாவின் உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் விஜய் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.. பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்ற விஜய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்..
இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. பாரதிராஜாவின் சாதனைகள், கலைத்துறை ஆற்றிய பங்களிப்புக்காக அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்..
மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர்.
பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.. முதல்வர் உத்தரவை அடுத்து பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது..
Read More : 6 முறை தேசிய விருது வென்றவர் பாரதிராஜா..! என்னென்ன படங்களுக்கு தெரியுமா..?



