மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தில் ரீல் மோகத்தால் பைக்கில் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்னி பதாரியா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, மூன்று இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, வீடியோ பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த செங்கல் ஏற்றிய டிரெய்லர் மீது அவர்கள் மோதி விபத்துக்குள்ளானனர்.
மோதலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதமடைந்ததுடன், அதில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பேலா கிராம் பகுதியைச் சேர்ந்த அப்லக்ஷ் கோல் (17), அம்ரிஷ் கோல் (22), ஹேம்ராஜ் கோல் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்குப் பிறகு, சில நிமிடங்களில் அதே டிரெய்லரில் மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியுள்ளது. இதில் சித்பூர்வா கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பிரஷாந்த் திவேதி மற்றும் பிரதீப் திவேதி பலத்த காயமடைந்தனர். முதலில் அருகிலுள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர்களை, பின்னர் ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் அவசர சேவை குழுக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. விசாரணையின் போது, சம்பவ இடத்திலிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகவும், அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிவேகம், கவனக்குறைவு மற்றும் தலைக்கவசம் அணியாதது போன்ற காரணங்களே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து நடந்த சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: பிராசத்திற்கு நடுவே தெருவோர கடையில் மசாலா பொரி சாப்பிட்ட பிரதமர் மோடி..! வைரலாகும் வீடியோ..



