அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கடந்த 2-ம் தேதி முதல் அஜித்குமாரின் உறவினர்கள், கோயில் பணியாளர்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், போலீஸார் உட்பட பல்வேறு தரப்பினரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதன் அறிக்கை இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.