விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சக மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அதே பள்ளியில் படித்து வந்த சக மாணவருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. பாட்டி வேலைக்குச் செல்லும் நேரங்களில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த மாணவர் அங்கு வந்து சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மாணவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: உங்க குழந்தைங்களால மொபைல் இல்லாம இருக்க முடியலையா? மனநல நிபுணர்கள் சொல்லும் தீர்வு இது தான்



