தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்ததை அடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறிவிட்டு அரசு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் ப்ரியாவின் குடும்பத்தினர் வீடு இன்றி கஷ்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவர்களின் குடும்பத்திற்கு வீட்டிற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா காலில் ஏற்பட்ட லோசான பிரச்சனைக்கு மருத்துவமனையை நாடினார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருக்கு வலி அதிகமானது.
இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தசையில் செல்கள் அழுகிக்கொண்டு வருவதால் காலை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். காலை எடுத்தால் மட்டுமே மகள் உயிர் பிழைப்பாள் என கூறியதால் அவர்கள் காலை எடுத்தனர். தொடர்ந்து பாதிப்பு பெரிதானது. இதற்கான காரணத்தை கண்டறிந்தபோது ரத்தக்கசிவு ஏற்படாமல் இருக்க இறுக்கமாக கட்டு போட்டதுதான் என தெரியவந்தது. இந்நிலையில் பிரியாவின் கிட்னி வரை பாதிப்பு பரவியது. கிட்னி பாதிப்புக்கு டயலிசிஸ் செய்ய வேண்டும் என தெரிவித்ததை அடுத்து டயலிஸ் சிகிச்சை செய்த பின்னர் பாதிப்பு இதயத்திற்கு சென்றது. இதையடுத்து பிரியா உயிரிழந்துவிட்டார்.
மருத்துவர்களின் அஜாக்கிரதையை கண்டித்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் சமாதானம் பேசியதை தொடர்ந்து மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு வீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இழப்பீட்டு தொகையையும். அரசு வீட்டின் ஆணையையும் பிரியாவின் குடும்பத்தினருக்கு வழங்கினார். பின்னர் அவர் வெளியிட்ட டுவீட் பதிவில் ’’ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு’’ என தெரிவித்திருந்தார். மேலும் அரசு அளிக்கும் உதவி அனைத்து வழிகளிலும் பயனளிக்கும் ஆனால் அவை பிரியாவின் உயிருக்கு ஈடாகாது என பதிவிட்டிருந்தார்.