ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவை என்பதைக் கவனத்தில் கொண்டு, இனிமேல் மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெற வருபவர்களை ‘நோயாளி’ என அல்லாது ‘மருத்துவப் பயனாளி’ என குறிப்பிடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது..
மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி “மருத்துவப் பயனாளிகள்” என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு?
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி “பேச் ஒர்க்” செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!



