தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி டெல்லிக்கு செல்ல வைத்து அழகு பார்க்க நினைக்கிறார் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். சீட் மறுக்கப்பட்டால், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அப்போது அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது குறித்து பேசிய பிரேமலதா, “அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். அதன்படி கமல்ஹாசன் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது, அதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார். தேமுதிகவை பொருத்தவரை மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை தந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றும் பிரேமலதா உறுதியாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.
Read more: கண் கலங்கிய ராமதாஸ்.. “வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது…” அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றவர் அன்புமணி..! வெடித்த பிரச்சனை..!