சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள இந்து கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருக்கும் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்றாலும் இங்கு கணிசமான அளவில் இந்துக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஏராளமான இந்து கோவில்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று திடீரென பங்களாதேஷில் உள்ள வெவ்வேறு ஊர்களில் இந்து கோவில்கள் தாக்கப்பட்டு அவற்றில் இருக்கும் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பங்களாதேஷ் காவல்துறை அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் மொத்தம் 14 இந்து கோவில்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மர்ம நபர்கள் இந்த தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிந்தூரப்பிந்தி என்ற இடத்தில் உள்ள கோவிலில் ஒன்பது சிலைகள் சேதபடுத்தப்பட்டுள்ளன. மேலும் காலேஜ்பாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் நான்கு சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் ஷபாஜ்பூர் மற்றும் நாக்பாரா பகுதிகளில் உள்ள கோவில்களில் 26 சாமி சிலைகள் சூறையாடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் இரவு நேரத்தில் நடத்தப்பட்டுள்ளதாகவும் சிலைகளை சேதப்படுத்தி உள்ள நபர்கள் அவற்றின் கை, கால்கள் மற்றும் தலை போன்றவற்றை சேதப்படுத்தி சாலையோரங்களிலும் குளங்களிலும் வீசி சென்றுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஹைருள் அனாம் தெரிவித்திருக்கிறார். இந்து கோவில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தங்களிடம் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கோவில் அமைப்புகளின் செயலாளர் வித்யநாத் பர்மன் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார். வங்கதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலைகளின் மீது தாக்குதல் நடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.