வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் செயல்பட்டு வரும் இந்திய உதவி உயர் ஆணையகத்தில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலக வளாகத்திற்குள் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர் சண்டிகரைச் சேர்ந்த 38 வயதான நரேன் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வங்கதேசத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஆணையகத்தில் உதவி நெறிமுறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். சட்டோகிராமின் குல்ஷி பகுதியில் உள்ள ஜாகிர் ஹொசைன் சாலையில் அமைந்துள்ள அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. குறிப்பாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள குளியலறை கதவின் முன்பு அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நரேன் தார் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மரணத்திற்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது உடல் சட்டோகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனை இயக்குநர் முகமது தஸ்லிம் உத்தின் கூறுகையில், “மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவர் உயிரிழந்திருந்தார். உடலில் வெளிப்படையான காயங்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான அடையாளங்களோ எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரண வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் உடல் இந்திய உதவி உயர் ஆணையக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அதிகாரியின் திடீர் மரணம் வங்கதேசம் மற்றும் இந்திய தூதரக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Read more: ஜில்லா பட பாணியில் சென்னை ரவுடிகளை ஒரே இரவில் தட்டி தூக்கிய தமிழ்நாடு காவல்துறை..! அதிரடி வேட்டை..



