வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வேகமாகப் பரவி வரும் தட்டம்மை நோய் பெரும் சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை கிடைத்த தகவலின்படி, தட்டம்மை பாதிப்புகளால் இதுவரை 459 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 75 குழந்தைகள் தட்டம்மை காரணமாக இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 384 மரணங்கள் சந்தேகிக்கப்படும் தட்டம்மை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, முன்னாள் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த முகமது யுனுஷ் மற்றும் மேலும் 24 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கதேச உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், யூனுஸ் பதவியில் இருந்த காலத்தில் தட்டம்மை தடுப்பூசிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம். அஷ்ரஃபுல் இஸ்லாம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
வங்கதேச சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் (DGHS) தகவலின்படி, மார்ச் 15 முதல் இதுவரை 57,846 தட்டம்மை சந்தேக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், வெறும் 24 மணி நேரத்தில் மட்டும் 1,274 புதிய சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 7,767 பேருக்கு தட்டம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்ப் பரவல் வங்கதேச சுகாதார அமைப்பின் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து 42,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 37,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தட்டம்மை தடுப்பூசி பற்றாக்குறையே இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணம் என சுகாதார நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, 2024–2025 காலகட்டத்தில் யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில் தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, டாக்காவில் “சோசெட்டோன் நாகோரிக் சமாஜ்” அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. தட்டம்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், World Health Organization, UNICEF உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், ஏப்ரல் 5 முதல் அவசர தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 17 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சமூக நோயெதிர்ப்பு சக்திக்குத் தேவையான 95 சதவீத தடுப்பூசி இலக்கை விட, கடந்த ஆண்டு வங்கதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 59 சதவீதமாக இருந்தது என்பது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Read more: தமிழ்நாட்டை ஆள்வது திமுக தான்..! இன்ஸ்டா மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர்..! மு.க. ஸ்டாலின் பேச்சு..!



