காக்கிநாடாவில் செல்போனில் இருந்த தனிப்பட்ட வீடியோக்கள் தொடர்பான தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் செல்போனில் இருந்த வீடியோக்களை வைத்து பணம் பறிக்க திட்டமிட்ட இருவர், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு அவரது கைரேகையை பயன்படுத்தி செல்போனை திறந்து, அதிலிருந்த வீடியோக்களை தங்களது செல்போன்களுக்கு மாற்றிச் சென்றுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கிரிதர். எம்.பி.ஏ படித்து வந்த இவர், தன்னார்வலராகவும் பணியாற்றி வந்தார். பல்வேறு இடங்களில் பணியாற்றியபோது பெண்களுடன் கிரிதருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது செல்போனில் சேமித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விவேக் மற்றும் ராமகிருஷ்ணா ஆகியோருடன் கிரிதருக்கு நட்பு ஏற்பட்டது. சம்பவத்துக்கு முந்தைய நாள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது பெண்கள் தொடர்பாக பேச்சு எழுந்து, தங்களுக்குள் யார் சிறந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிரிதர் தனது செல்போனில் இருந்த சில தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இருவரிடமும் காட்டியுள்ளார். அதில் விவேக் காதலித்து வந்த பெண்ணுடன் கிரிதர் நெருக்கமாக இருக்கும் வீடியோவும் இருந்தது. இதைப் பார்த்த விவேக்கும் ராமகிருஷ்ணாவும் அந்த வீடியோக்களை தங்களிடம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களின் பெற்றோரிடம் காட்டி பணம் பறிக்கலாம் என இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தனது செல்போனில் இருந்த பதிவுகளை அவர்களிடம் கொடுக்க கிரிதர் மறுத்துள்ளார். இதனால் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் கிரிதர் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீடியோக்களை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த விவேக்கும் ராமகிருஷ்ணாவும் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று கத்தி வாங்கியுள்ளனர். தொடர்ந்து கிரிதரின் வீட்டுக்குச் சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த கிரிதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு கிரிதரின் செல்போனை எடுத்த இருவரும், அவரது கைரேகையை பயன்படுத்தி செல்போனை திறந்துள்ளனர். அதில் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தங்களது செல்போன்களுக்கு மாற்றிக் கொண்டனர். பின்னர் கிரிதரின் செல்போனில் இருந்த பதிவுகளை அழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் கிரிதரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து விவேக் மற்றும் ராமகிருஷ்ணாவை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் செல்போனில் இருந்து மாற்றப்பட்ட பதிவுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்பட்ட வீடியோக்களை வைத்து பணம் பறிக்க முயன்ற தகராறு, நண்பரின் கொலையில் முடிந்த சம்பவம் காக்கிநாடா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: வயிற்றில் அடிக்கடி சத்தம் கேட்கிறதா? பசி மட்டுமல்ல.. இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம்!



