நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிந்து பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பயங்கரக் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த இந்த இயற்கை பேரிடரில் நேபாளத்தில் இதுவரை 626-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,500-க்கும் அதிகமானோரைக் காணவில்லை.
சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் துறைமுகத்தில் (Gyirong Port) ஏற்பட்ட பயங்கர மண்சரிவுக்குக் காரணமான பனிப்பாறை சரிவைச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த வல்லுநர் காங் ஷிசாங் (Kang Shichang), வீடியோவில் உள்ள இடம் நேபாளப் பகுதியில் 5,140 மீட்டர் உயரத்தில் பனிப்பாறை சரிந்த இடத்துடன் ஒத்துப் போவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் 6,20,000 சதுர மீட்டர் பரப்பளவிலான பனி மற்றும் பாறைகள் சரிந்து, 20 கிலோமீட்டர் தூரத்திற்கு மலையிலிருந்து அடித்து வரப்பட்டன. வெறும் 7 நிமிடங்களில் 3,300 மீட்டர் உயரத்திலிருந்து சீறிப் பாய்ந்த இந்தச் சேறு மற்றும் கழிவுகள் கியிரோங் துறைமுகப் பகுதியைச் சூறையாடின.
நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ஆபத்தான மலைப்பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்பாறை சரிவால் ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக உருவாகியுள்ள “தடை ஏரி” (Barrier lake) உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



