மாலத்தீவு நாட்டில் கடலுக்கடியில் உள்ள ஆழ்குகையில் சிக்கிய 4 இத்தாலிய மூழ்காளர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ மூழ்காளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தேடுதல் பணியை மாலத்தீவு அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
அறிக்கைகளின்படி, வாவு அட்டோல் பகுதியில் சுமார் 50 மீட்டர் ஆழமுள்ள கடலுக்கடிக் குகையை ஆய்வு செய்துகொண்டிருந்த 5 இத்தாலியர்கள் கொண்ட குழு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மாலத்தீவில் பொழுதுபோக்கு மூழ்குதலுக்கான அதிகபட்ச அனுமதி 30 மீட்டர் மட்டுமே என்பதால், இந்த ஆழ்கடல் பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முகமது மஹுதீ என்ற ராணுவ மூழ்காளர், அழுத்தக்குறைவு பாதிப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆழ்கடல் மற்றும் குகை மூழ்குதலில் நிபுணத்துவம் பெற்ற பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 நிபுணர் மூழ்காளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வருகைக்கு பிறகு மீட்பு திட்டம் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை மோசமான வானிலை தொடர்ந்து பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணியில் 8 உள்ளூர் மூழ்காளர்கள் மாறி மாறி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குகை அமைப்பின் நுழைவாயிலை கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கடுமையான அழுத்த மாற்றங்கள் காரணமாக தேடுதல் பணி மிகவும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்ததாக நம்பப்படும் இத்தாலியர்களில் ஜெனோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோனிகா மான்டெஃபால்கோன், அவரது மகள் ஜார்ஜியா சோமக்கால், கடல்சார் உயிரியலாளர் ஃபெடரிகோ குவால்தியேரி, ஆய்வாளர் முரியல் ஒடெனினோ மற்றும் மூழ்கல் பயிற்றுவிப்பாளர் கியான்லூகா பெனடெட்டி ஆகியோர் அடங்குகின்றனர்.
பெனடெட்டியின் உடல் ஏற்கனவே குகை நுழைவாயிலுக்கு அருகே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற 4 பேரும் குகையின் ஆழப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மோனிகா மான்டெஃபால்கோனின் கணவர் கார்லோ சோமக்கால், தனது மனைவியும் மகளும் அனுபவம் வாய்ந்த மற்றும் மிகவும் பாதுகாப்பாக செயல்படும் மூழ்காளர்கள். கடலுக்கு அடியில் ஏதோ நடந்திருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தை ஏற்பாடு செய்த இத்தாலிய சுற்றுலா நிறுவனம், 30 மீட்டருக்கு மேல் மூழ்குவதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், அதுகுறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் கூறுகையில், 40 மீட்டருக்கு மேல் மூழ்குதல் என்பது தொழில்நுட்ப மூழ்குதலாக கருதப்படுவதால், அதற்கு சிறப்பு பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ‘டியூக் ஆஃப் யார்க்’ கப்பலின் இயக்க உரிமத்தை மாலத்தீவு சுற்றுலாத்துறை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.



