குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் ரூ.2,000 வீட்டு வாடகையை செலுத்த முடியாத காரணத்தால், ஒருவர் தனது மனைவியையும் 13 வயது மகளையும் வீட்டு உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயும் பாட்டியும் மே 1ஆம் தேதி மோர்பி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், புதிய குற்றவியல் சட்டங்களும், குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை தகவலின்படி, வேலை தேடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தக் குடும்பம் மோர்பிக்கு குடிபெயர்ந்துள்ளது. அப்போது மாதம் ரூ.2,000 வாடகையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். ஆனால் குடும்பத் தலைவரின் தொழில் நஷ்டமடைந்ததால், தொடர்ந்து வாடகை பாக்கி அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிதி நெருக்கடியை பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர், கணவரின் சம்மதத்துடன் அவரது மனைவியையும், 13 வயது மகளையும் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் வாடகை வீடு மட்டுமின்றி, வீட்டு உரிமையாளரின் இல்லம் மற்றும் மற்றொரு இடத்திலும் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 55 வயதான வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்தக் குற்றத்தில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மற்ற நபர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடங்களில் இருந்து அறிவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறுமி ஒருவரும் இந்தக் கொடூரத்திற்கு பலியாகியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
Read more: 65 பேர் பலி.. ஆப்பிரிக்காவை அதிரவைக்கும் புதிய எபோலா வைரஸ் பரவல்..! அறிகுறிகள் என்னென்ன..?



