சென்னை அண்ணாநகர் கிழக்கு, பள்ளியரசன் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மலர்விழி. இவரது மகள் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அண்ணாநகர் கெனால் சாலை பகுதியில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவன் திடீரென பாய்ந்துள்ளார். அவன் வந்த இருசக்கர வாகனத்தில் பதிவெண் இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, முகமூடி அணிந்த நபர் மலர்விழியின் மகள் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்விழி, உடனடியாக சம்பவம் குறித்து சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் ஆய்வு செய்தனர்.
அப்போது போலீசார், சந்தேகத்திற்குரிய நபர் அணிந்திருந்த சட்டையில் ‘வரிக்குதிரை’ படமும், ஒரு தனித்துவமான கோடு வடிவமைப்பும் இருப்பதை கவனித்துள்ளனர். அந்த சட்டையை தடயமாகக் கொண்டு அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களைப் பின்தொடர்து ஆய்வு செய்த போது, அந்த நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்த 24 வயதான சரவணன் என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான சரவணன் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருக்கும் ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்வது தெரியவந்துள்ளது. மேலும், அவரது காதலிக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் என்பதால், அவருக்கு ஐபோன் பரிசலிக்க விரும்பியுள்ளார்.
ஆனால், ஐபோன் வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சரவணனிடமிருந்து மாணவியின் ஒன்றரை பவுன் தங்க நகையும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணன் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


