பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள மகப்பேறியல் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் நர்சரிப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஏசியின் கம்ப்ரசர் வெடித்ததே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் எனத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தபோது அந்தப் பிரிவில் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் போராடி ஒரே ஒரு குழந்தையை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது என்றும், மற்ற 15 குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்ததாகவும் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது அங்கு மீட்பு மற்றும் குளிரூட்டும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் துணை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.



