செயற்கை நுண்ணறிவு துறையில் தனது முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, மெட்டா நிறுவனத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரி ஜானெல் கேல் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதில், மே 20ஆம் தேதி இந்த ஆட்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை முன்னிறுத்தும் முயற்சியில் ஆரக்கிள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் எடுத்த பாதையை மெட்டாவும் பின்பற்றுகிறது.
செலவுகளை கட்டுப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதே இந்த முடிவின் பின்னணி என கூறப்படுகிறது. மேலும், முன்னதாக நிரப்பப்பட வேண்டியதாக இருந்த சுமார் 6,000 காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு திட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவு எளிதானதல்ல என்பதை ஒப்புக்கொண்ட ஜானெல் கேல், தகவல் முன்கூட்டியே வெளியானதால் வழக்கத்தை விட சீக்கிரமாக ஊழியர்களுக்கு அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் கூடுதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி நடந்தால், மொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதம் வரை குறைப்பு ஏற்படலாம்.
முன்னதாகவே மெட்டா நிறுவனத்தின் ரியாலிட்டி ஆய்வகங்கள் பிரிவில் உள்ளிட்ட பல குழுக்களில் சுமார் 700 பணியிடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. தற்போது செலவுகளை கட்டுப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் பெரும் முதலீடு செய்யும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்காக ஊழியர்களின் மவுஸ் அசைவுகள் மற்றும் விசைப்பலகை பயன்பாட்டை கண்காணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் சில ஊழியர்களிடையே விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.



